சங்கீதம் 10
 1 யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்? 
துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்? 
 2 கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்; 
அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். 
 3 அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்; 
அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான். 
 4 கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை; 
அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை. 
 5 அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன; 
உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்; 
தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான். 
 6 அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை, 
எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான். 
 7 அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது; 
அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன. 
 8 அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்; 
பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான். 
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து, 
 9 பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான். 
அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்; 
அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான். 
 10 அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்; 
அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள். 
 11 “இறைவன் கண்டுகொள்ளமாட்டார்; 
அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை” 
என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். 
 12 யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்; 
ஆதரவற்றோரை மறவாதிரும். 
 13 கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்? 
“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று 
அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்? 
 14 ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்; 
நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து, 
அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர். 
பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்; 
திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர். 
 15 கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும். 
தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும். 
இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது. 
 16 யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்; 
அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள். 
 17 யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்; 
அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார். 
 18 பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும் 
மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி, 
நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.