சங்கீதம் 11
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன். 
அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்: 
“ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ. 
 2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்; 
நேர்மையான இருதயம் உள்ளவர்மேல் 
இருளிலிருந்து எய்வதற்காக 
தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். 
 3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது, 
நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?” 
 4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; 
யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். 
அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்; 
அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன. 
 5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்; 
வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ, 
அவர் மனதார வெறுக்கிறார். 
 6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும், 
எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்; 
வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும். 
 7 யெகோவா நீதியுள்ளவர், 
அவர் நீதியை நேசிக்கிறார்; 
நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.