சங்கீதம் 20
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 
 1 நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக; 
யாக்கோபின் இறைவனுடைய பெயர் உன்னைப் பாதுகாப்பதாக. 
 2 யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி, 
சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக. 
 3 யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து, 
உனது தகனபலிகளை ஏற்றுக்கொள்வாராக. 
 4 யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து, 
உனது திட்டங்களையெல்லாம் வெற்றிபெறச் செய்வாராக. 
 5 யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்; 
நமது இறைவனுடைய பெயரில் நாங்கள் வெற்றிக்கொடிகளை உயர்த்துவோம். 
யெகோவா உன் வேண்டுதல்கள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பாராக. 
 6 நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்: 
யெகோவா தாம் அபிஷேகம் பண்ணியவனை இரட்சிக்கிறார். 
அவர் தமது பரிசுத்த பரலோகத்திலிருந்து 
தமது வலதுகரத்தின் மீட்கும் வல்லமையைக்கொண்டு, அவனுக்குப் பதில் கொடுக்கிறார். 
 7 சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; 
ஆனால் நாங்களோ, நமது இறைவனாகிய யெகோவாவினுடைய பெயரிலேயே நம்பிக்கை வைக்கிறோம். 
 8 அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள், 
நாங்களோ எழுந்து உறுதியாய் நிற்கிறோம். 
 9 யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்! 
நாங்கள் கூப்பிடும்போது எங்களுக்குப் பதில் தாரும்.