சங்கீதம் 66
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு. 
 1 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் 
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்! 
 2 அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்; 
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள். 
 3 இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை! 
உமது வல்லமை பெரிதானது; 
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள். 
 4 பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்; 
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள், 
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.” 
 5 இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; 
மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. 
 6 அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; 
மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; 
வாருங்கள், அவரில் களிகூருவோம். 
 7 அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; 
அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; 
கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். 
 8 எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; 
அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. 
 9 அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; 
நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். 
 10 இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; 
வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். 
 11 எங்களைச் சிறைபிடித்து, 
எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். 
 12 மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; 
நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், 
ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர். 
 13 நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்; 
எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். 
 14 நான் துன்பத்திலிருந்தபோது 
என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன். 
 15 நான் கொழுத்த மிருகங்களையும் 
செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்; 
நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன். 
 16 இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்; 
அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 
 17 நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; 
அவருடைய துதி என் நாவில் இருந்தது. 
 18 என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், 
யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்; 
 19 இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, 
என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். 
 20 என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், 
என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த 
இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.