சங்கீதம் 97
 1 யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; 
தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும். 
 2 மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; 
நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார். 
 3 நெருப்பு அவருக்கு முன்சென்று, 
சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. 
 4 அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; 
பூமி அதைக்கண்டு நடுங்குகிறது. 
 5 யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே 
மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன. 
 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; 
எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 
 7 உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், 
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; 
தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள். 
 8 யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் 
சீயோன் கேட்டுக் களிகூருகிறது; 
யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன. 
 9 யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; 
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர். 
 10 யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; 
ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, 
கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். 
 11 நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, 
இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது. 
 12 நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், 
அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.