சங்கீதம் 98
சங்கீதம். 
 1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 
ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; 
அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே 
இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. 
 2 யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, 
தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார். 
 3 அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த 
தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்; 
பூமியின் எல்லைகள் எல்லாம் 
நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன. 
 4 பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் 
யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; 
முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள். 
 5 யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; 
யாழோடும், கீதசத்தத்தோடும், 
 6 எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் 
யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள். 
 7 கடலும் அதிலுள்ள அனைத்தும், 
உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக. 
 8 ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; 
மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும். 
 9 அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; 
ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; 
அவர் உலகத்தை நீதியுடனும், 
நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.