சங்கீதம் 135
 1 யெகோவாவைத் துதியுங்கள்.* 135:1 எபிரெயத்தில் அல்லேலூயா  வச 3 மற்றும் 21 
யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்; 
யெகோவாவின் பணியாட்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள், 
 2 நமது இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், 
யெகோவாவினுடைய ஆலயத்திலும் ஊழியம் செய்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள். 
 3 யெகோவாவைத் துதியுங்கள், யெகோவா நல்லவர்; 
அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள், அது இனிமையானது. 
 4 ஏனெனில் யெகோவா யாக்கோபைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்; 
இஸ்ரயேலரைத் தமது அருமைச் சொத்தாய் இருக்கும்படி தெரிந்துகொண்டார். 
 5 யெகோவா பெரியவர் என்றும், 
நமது யெகோவா எல்லாத் தெய்வங்களைப் பார்க்கிலும், 
மேலானவர் என்பதையும் நான் அறிவேன். 
 6 வானத்திலும் பூமியிலும், 
கடல்களிலும், அவைகளின் எல்லா ஆழங்களிலும் 
யெகோவா தமக்கு விருப்பமான எதையும் செய்கிறார். 
 7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச் செய்கிறார்; 
மழையுடன் மின்னலையும் அவர் அனுப்புகிறார், 
காற்றை தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து வெளியே புறப்படச்செய்கிறார். 
 8 அவர் எகிப்தின் முதற்பேறுகளை அழித்தார், 
மனிதரின் முதற்பேறுகளையும் மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார். 
 9 எகிப்தே, பார்வோனுக்கும் அவனுடைய எல்லா பணியாட்களுக்கும் விரோதமாக 
அவர் தம்முடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் உன் மத்தியில் அனுப்பினாரே. 
 10 அவர் அநேக நாடுகளைத் தாக்கினார், 
வலிமைமிக்க அரசர்களைக் கொன்றார்; 
 11 எமோரியரின் அரசன் சீகோனையும், 
பாசானின் அரசன் ஓகையும், 
கானானின் அரசர்கள் எல்லோரையும் அழித்தார், 
 12 அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாக, 
தமது மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். 
 13 யெகோவாவே, உமது பெயர் என்றென்றைக்கும் நிலைக்கிறது; 
யெகோவாவே, உமது புகழ் தலைமுறை தலைமுறையாக நிலைக்கும். 
 14 யெகோவா தம் மக்களின் நியாயத்தை விசாரித்து, 
தம் அடியார்கள்மேல் இரக்கங்காட்டுவார். 
 15 பிறநாடுகளின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், 
மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது. 
 16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; 
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 
 17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, 
அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. 
 18 அவைகளைச் செய்கிறவர்களும், 
அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 
 19 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; 
ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; 
 20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவைத் துதியுங்கள்; 
அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவைத் துதியுங்கள். 
 21 எருசலேமில் குடிகொண்டிருக்கும் யெகோவாவுக்கு, 
சீயோனிலிருந்து துதி உண்டாகட்டும். 
யெகோவாவைத் துதியுங்கள்.