35
மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி 
 1 பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். 
வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும். 
அது லீலி பூப்பதுபோல் பூக்கும்.  2 அது வளமாய் வளர்ந்து 
மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும். 
லெபனோனின் மகிமையும், 
கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும். 
யெகோவாவின் மகிமையையும், 
நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள். 
 3 தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள், 
தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள். 
 4 இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு, 
“திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்; 
இதோ, உங்கள் இறைவன் 
உங்கள் பகைவரை பழிதீர்க்கவும், 
பதிலளிக்கவும் வருவார், 
அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள். 
 5 அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், 
செவிடரின் காதுகளும் திறக்கப்படும். 
 6 முடவன் மானைப்போல் துள்ளுவான், 
ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்; 
வனாந்திரத்திலிருந்து தண்ணீரும், 
பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும். 
 7 சுடுமணல் நீர்த் தடாகமாகும், 
வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும். 
நரிகள் தங்கும் இடங்களில் 
புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும். 
 8 அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும், 
அது பரிசுத்த வழி எனப்படும். 
அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள். 
இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும். 
கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள். 
 9 அங்கு சிங்கம் இருப்பதில்லை; 
எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை, 
அங்கே காணப்படுவதுமில்லை. 
மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 
 10 யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். 
அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்; 
நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும். 
மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள், 
துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.