34
நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு 
 1 நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; 
மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். 
பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், 
உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும். 
 2 யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; 
அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. 
அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; 
அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார். 
 3 அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், 
இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; 
மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும். 
 4 வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; 
ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். 
வானசேனை அனைத்தும் 
திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், 
சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும். 
 5 எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; 
இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை 
நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது. 
 6 யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, 
அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. 
அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், 
செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. 
ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், 
ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார். 
 7 காளைக் கன்றுகளும், 
பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். 
அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், 
புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும். 
 8 ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; 
சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார். 
 9 ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், 
நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், 
அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும். 
 10 அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; 
அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். 
தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், 
மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள். 
 11 பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் 
அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; 
பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். 
இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், 
அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார். 
 12 உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; 
இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள். 
 13 அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; 
காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். 
அது நரிகளுக்குத் தங்குமிடமும் 
ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும். 
 14 பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; 
காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். 
இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி 
தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும். 
 15 ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, 
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, 
அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; 
வல்லூறுகளும் தத்தம் துணையுடன் 
அங்கே வந்துசேரும். 
 16 யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: 
இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, 
ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; 
யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, 
அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார். 
 17 அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; 
அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. 
அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, 
தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.