55
தாகமுள்ளோருக்கு அழைப்பு 
 1 “ஓ! தாகமாய் இருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் 
நீங்கள் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; 
பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள், 
வாங்கி உட்கொள்ளுங்கள். 
வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி 
திராட்சரசமும் பாலும் வாங்குங்கள். 
 2 உணவுக்கு உதவாதவற்றின்மேல் பணத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? 
திருப்தி அளிக்காதவற்றின்மேல் ஏன் பிரயாசப்படுகிறீர்கள்? 
கேளுங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள், நல்லதையே சாப்பிடுங்கள். 
அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுமையான உணவின் நிறைவுகளினால் மகிழும். 
 3 காது கொடுத்துக் கேளுங்கள், என்னிடம் வாருங்கள்; 
உங்கள் ஆத்துமா வாழ்வதற்காக நான் சொல்வதைக் கேளுங்கள். 
நான் உங்களுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்வேன்; 
நான் தாவீதுக்கு வாக்களித்த எனது உண்மையான அன்பை உங்களுக்குக் கொடுப்பேன். 
 4 இதோ, நான் அவனை மக்கள் கூட்டங்களுக்கு ஒரு சாட்சியாகவும், 
மக்கள் கூட்டங்களுக்குத் தலைவனாகவும், தளபதியாகவும் அவனை வைத்தேன். 
 5 ஆகையால் நிச்சயமாகவே நீங்கள் அறியாத நாடுகளுக்கு அழைப்பாய், 
உங்களை அறியாத பிறநாடுகள் உங்களிடம் விரைந்து வருவார்கள். 
ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரும் 
இறைவனுமான உங்கள் யெகோவா 
உங்களைச் சிறப்பினால் அலங்கரித்துள்ளார்.” 
 6 அவரைக் கண்டுகொள்ள வாய்ப்புள்ள வேளையில் யெகோவாவைத் தேடுங்கள்; 
அவர் அருகிலிருக்கையில் அவரைக் கூப்பிடுங்கள். 
 7 கொடியவன் தன் வழிகளையும், 
தீயவன் தன் எண்ணங்களையும் கைவிடட்டும்; 
அவன் யெகோவாவிடம் திரும்பட்டும், அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவார், 
எங்கள் இறைவனிடம் திரும்பட்டும், அவர் அவனை தாராளமாக மன்னிப்பார். 
 8 “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; 
உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல” 
என்று யெகோவா சொல்லுகிறார். 
 9 “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் உயர்ந்தனவாய் இருக்கின்றது போலவே, 
என் வழிகளும் உங்கள் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவையாய் இருக்கின்றன. 
என் எண்ணங்களும் உங்கள் எண்ணங்களிலும் மேலானவை. 
 10 மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன; 
அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி, 
அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல் 
அவை திரும்பிச் செல்வதில்லை. 
எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும், 
உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன. 
 11 என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது: 
நான் விரும்பியவற்றைச் செய்து, 
நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல் 
அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது. 
 12 நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி 
சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்; 
மலைகளும் குன்றுகளும் 
உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்; 
வெளியின் மரங்கள் யாவும் 
கைகொட்டும். 
 13 முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், 
காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும். 
இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும், 
அழியாத நித்திய 
அடையாளமாகவும் இருக்கும்.”