56
அந்நியருக்கும் இரட்சிப்பு 
 1 யெகோவா சொல்வது இதுவே: 
“நியாயத்தைக் கைக்கொண்டு 
நீதியைச் செய்யுங்கள். 
ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது; 
எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும். 
 2 இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு, 
ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து, 
தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள் 
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.” 
 3 யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர், 
“யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்” 
என்று சொல்லாமல் இருக்கட்டும். 
அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே” 
என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும். 
 4 யெகோவா சொல்வது இதுவே: 
“எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து, 
எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு 
என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு, 
 5 என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும், 
மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த 
ஒரு பெயரையும் கொடுப்பேன். 
ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற 
நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன். 
 6 யெகோவாவை அண்டியிருந்து, 
அவருக்கு ஊழியம் செய்து, 
யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும், 
ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல் 
அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை 
உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது: 
 7 நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, 
என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன். 
அவர்களின் தகனபலிகளும், 
மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். 
ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும் 
ஜெபவீடு என்று அழைக்கப்படும். 
 8 நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும் 
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்: 
ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட 
இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.” 
கொடியோருக்கு விரோதமான இறைவன் 
 9 வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள். 
காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள். 
 10 இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும் 
அறிவில்லாத குருடர்; 
அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத 
ஊமையான நாய்கள்; 
அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள், 
நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள். 
 11 அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்; 
அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. 
பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள், 
அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி, 
ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள். 
 12 ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்; 
நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்; 
நாம் மதுவை நிறையக் குடிப்போம், 
நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும், 
அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள்.