சங்கீதம் 76
கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம். 
 1 யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; 
இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது. 
 2 அவருடைய கூடாரம் சாலேமில்* 76:2 சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம். இருக்கிறது; 
அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது. 
 3 அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், 
கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார். 
 4 நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; 
வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர். 
 5 வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, 
அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; 
போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை 
உயர்த்த முடியாமலிருக்கிறான். 
 6 யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் 
குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன. 
 7 நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; 
நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்? 
 8 நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; 
பூமி பயந்து அமைதியாய் இருந்தது. 
 9 இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக 
நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர். 
 10 நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் 
உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; 
உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர். 
 11 உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, 
அவைகளை நிறைவேற்றுங்கள். 
அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான 
அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும். 
 12 அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; 
பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.