சங்கீதம் 77
பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். 
 1 நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்; 
எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன். 
 2 நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்; 
இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன், 
என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது. 
 3 இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; 
நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று. 
 4 நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; 
நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன். 
 5 முந்தின நாட்களையும், 
கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்; 
 6 நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன். 
என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது: 
 7 “யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ? 
அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ? 
 8 அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? 
அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ? 
 9 இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ? 
அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?” 
 10 அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், 
எனக்காக செயலாற்றுகிறது, 
 11 யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்; 
ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன். 
 12 உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்; 
உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன். 
 13 இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; 
நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்? 
 14 அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே; 
நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர். 
 15 உமது வல்லமையுள்ள புயத்தினால் 
யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர். 
 16 இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது, 
சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது; 
மகா ஆழங்களும் நடுங்கின. 
 17 மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன, 
ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன; 
உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன. 
 18 உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது, 
உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது; 
பூமி நடுங்கி அதிர்ந்தது. 
 19 உமது பாதை கடலிலும், 
உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது; 
ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை. 
 20 மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால் 
நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.