கர்த்தர் தம் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார்
௧ஏதோமிலிருந்து வந்துகொண்டிருக்கிற இவன் யார்?
அவன் போஸ்றாவிலிருந்து வருகிறான்.
அவனது ஆடைகள் கட்டிச் சிவப்பாக உள்ளது.
அவனது ஆடைகள் மகத்துவமாய் உள்ளது.
அவன் பெரும் வல்லமையோடு உயரமாக நடந்துகொண்டிருக்கிறான்.
அவன், “உன்னைக் காக்கும் வல்லமை என்னிடம் உள்ளது. நான் உண்மையைப் பேசுகிறேன்” என்கிறான்.
௨“உனது ஆடைகள் ஏன் சிவப்பாக உள்ளன?
அவை, திராட்சையை ரசமாக்குகிற இடத்தில் நடந்து வந்தவனைப் போன்றுள்ளன.”
௩அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன்.
எவரும் எனக்கு உதவவில்லை.
நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன்.
அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன.
௪ஜனங்களைத் தண்டிக்க நான் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்.
இப்போது, எனது ஜனங்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் உரிய நேரம் வந்துள்ளது.
௫நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் எவரும் எனக்கு உதவுவதைக் காணவில்லை.
எவரும் எனக்கு உதவவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
எனவே, என் ஜனங்களைக் காப்பாற்ற
என் சொந்த வல்லமையைப் பயன்படுத்தினேன், என் கோபம் என்னைத் தாங்கினது.
௬நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன்.
என் கோபம் அதிகமானபடியால் அவர்களைத் தண்டித்தேன்.
நான் அவர்களது இரத்தத்தைத் தரையில் ஊற்றினேன்.”
கர்த்தர் அவரது ஜனங்களிடம் தயவோடு இருக்கிறார்
௭கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன்.
கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன்.
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார்.
கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார்.
௮கர்த்தர், “இவர்கள் என்னுடைய ஜனங்கள்.
இவர்கள் என்னுடைய மெய்யான பிள்ளைகள்” என்றார்.
எனவே கர்த்தர் அந்த ஜனங்களைக் காப்பாற்றினார்.
௯ஜனங்களுக்கு நிறைய துன்பங்கள் இருந்தன.
ஆனால் கர்த்தர் அவர்களுக்கு எதிராக இல்லை.
கர்த்தர் ஜனங்களை நேசித்தார். அவர்களுக்காக வருத்தப்பட்டார்.
எனவே கர்த்தர் அவர்களைக் காப்பாற்றினார்.
அவர் தமது சிறப்பான தூதனை அவர்களைக் காப்பாற்ற அனுப்பினார்.
கர்த்தர் என்றென்றும் அவர்களிடம் அக்கறைகொண்டார்.
கர்த்தர் அந்த ஜனங்களுக்காக அக்கறைகொள்வதை நிறுத்த விரும்பவில்லை.
௧௦ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள்.
ஜனங்கள் அவரது பரிசுத்த ஆவியை வருந்தும்படி செய்தனர்.
எனவே, கர்த்தர் அவர்களின் பகைவரானார்.
கர்த்தர் அவர்களுக்கு எதிராகப் போராடினார்.
௧௧ஆனால், கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை இப்போதும் நினைவுகொள்கிறார்.
அவர் மோசேயையும் அவரது ஜனங்களையும் நினைவுகொள்கிறார்.
கடல்வழியாக ஜனங்களைக் கொண்டுவந்தவர் கர்த்தர் ஒருவரே.
கர்த்தர் தம் மந்தைகளை (ஜனங்கள்) வழிநடத்த மேய்ப்பர்களைப் (தீர்க்கதரிசிகளை) பயன்படுத்தினார்.
ஆனால் இப்போது, மோசேயில் தன் ஆவியை வைத்தவர் எங்கே இருக்கிறார்?
௧௨கர்த்தர் மோசேயை அவரது வலது கையால் வழி நடத்தினார்.
கர்த்தர் மோசேயை வழிநடத்த அவரது அற்புத வல்லமையைப் பயன்படுத்தினார்.
கர்த்தர் தண்ணீரைப் பிரித்தார்.
அதனால் ஜனங்கள் கடல் வழியாக நடக்கமுடிந்தது.
கர்த்தர் இப்பெருஞ் செயலைக் செய்ததின் மூலமாக தனது நாமத்தை நித்திய புகழுக்குரியதாக்கினார்.
௧௩கர்த்தர் ஜனங்களை ஆழமான கடல் வழியாக நடத்தினார்.
ஜனங்கள் கீழே விழாமல் பாலைவனத்தின் வழியாக ஒரு குதிரை செல்வதுபோல் சென்றனர்.
௧௪ஒரு பசு வயலில் நடந்து செல்லும்போது அது கீழே விழாது.
அதேபோன்று ஜனங்கள் கடல் வழியாகப் போகும்போது கீழே விழவில்லை.
கர்த்தருடைய ஆவி ஜனங்களை ஒரு ஓய்விடத்திற்கு அழைத்துச் சென்றது.
ஜனங்கள் முழுநேரமும் பாதுகாப்பாக இருந்தனர்.
கர்த்தாவே, அதுதான் நீர் உமது ஜனங்களை நடத்திய வழி.
நீர் ஜனங்களை வழிநடத்தினீர். நீர் உமது நாமத்தை அற்புதமாக்கினீர்!
அவரது ஜனங்களுக்கு உதவ தேவனிடம் ஒரு ஜெபம்
௧௫கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்!
இப்பொழுது, நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பாரும்!
பரலோகத்திலுள்ள உமது பெருமையும். பரிசுத்தமும் கொண்ட வீட்டிலிருந்து என்னைப் பாரும்!
என் மீதிருந்த உமது பலமான அன்பு எங்கே?
எனக்கான உமது இரக்கம் எங்கே?
என்னிடமிருந்து உமது கருணையை ஏன் மறைத்தீர்?
௧௬பாரும். நீர் எமது தந்தை!
எங்களை ஆபிரகாம் அறியமாட்டார்.
இஸ்ரவேல் (யாக்கோபு) எங்களை அடையாளம் காணவில்லை.
கர்த்தாவே, நீர் எமது தந்தை.
எங்களை எப்போதும் காப்பாற்றுகிறவர் நீர் ஒருவரே.
௧௭கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர்.
உம்மைப் பின்தொடர்வதை நீர் ஏன் கடினமாக்கினீர்?
கர்த்தாவே எங்களிடம் திரும்பி வாரும்.
நாங்கள் உமது ஊழியர்கள்.
எங்களிடம் வந்து எங்களைக் காப்பாற்றும்.
எங்கள் குடும்பங்களும் உம்மைச் சார்ந்தது.
௧௮உமது பரிசுத்தமான ஜனங்கள் அவர்களின் நாடுகளில் கொஞ்சம் காலமே வாழ்ந்தார்கள்.
பிறகு எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்தமான ஆலயத்தை மிதித்தனர்.
௧௯சிலர் உம்மைப் பின்பற்றவில்லை.
அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை.
நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம்.