லோத்தின் பார்வையாளர்கள்
௧-௨அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள் என்று நினைத்தான். அவன் எழுந்து அவர்களிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான். லோத்து அவர்களிடம், “ஐயா, எனது வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்குச் சேவை செய்வேன். உங்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டு இரவில் அங்கே தங்கி, நாளை உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அதற்குத் தேவதூதர்கள், “இல்லை, நாங்கள் இரவில் வெட்டவெளியில் தங்குவோம்” என்றனர்.
ஆனால் லோத்து தொடர்ந்து தன் வீட்டிற்கு வருமாறு அவர்களை வற்புறுத்தினான். அவர்களும் ஒப்புக்கொண்டு அவனது வீட்டிற்குப் போனார்கள். அவர்களுக்காக அவன் ஆயத்தம் செய்த ரொட்டியை அவர்கள் சாப்பிட்டார்கள்.
அன்று மாலை தூங்குவதற்கு முன்னால், லோத்தின் வீட்டிற்கு நகரின் பலபாகங்களில் இருந்தும் இளைஞர், முதியோர்கள் எனப் பலரும் கூடிவந்து வீட்டைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவனை அழைத்தனர். அவர்கள், “இன்று இரவு உன் வீட்டிற்கு வந்த இருவரும் எங்கே? அவர்களை வெளியே அழைத்து வா, நாங்கள் அவர்களோடு பாலின உறவு கொள்ள வேண்டும்” என்றனர்.
லோத்து வெளியே வந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டான். லோத்து அவர்களிடம், “நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எந்த ஆணையும் அறியாதவர்கள். நான் அவர்களை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் அவர்களோடு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் இந்த மனிதர்களை எதுவும் செய்து விடாதீர்கள். இவர்கள் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.
வீட்டைச் சுற்றி நின்றவர்கள், “எங்கள் வழியில் குறுக்கிடாதே” என்று சத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் தங்களுக்குள்ளேயே, “லோத்து நமது நகரத்திற்கு விருந்தாளியாக வந்தான். இப்போது நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நமக்கே கூறுகிறான்” என்றனர். பிறகு அவர்கள் லோத்திடம், “நாங்கள் அந்த மனிதர்களை விட உனக்கே அதிகக் கொடுமையைச் செய்வோம்” என்று கூறி லோத்தை நெருங்கி வந்து, கதவை உடைப்பதற்கு முயன்றனர்.
௧௦ஆனால் லோத்தின் வீட்டிற்குள் இருந்த இருவரும் கதவைத் திறந்து லோத்தை வீட்டிற்குள் இழுத்து கதவை மூடிக்கொண்டனர். ௧௧பிறகு அவர்கள் கதவுக்கு வெளியே இருந்த இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் பார்வையை இழக்கும்படி செய்தனர். எனவே, அவர்களால் கதவு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சோதோமிலிருந்து தப்பித்தல்
௧௨அந்த இருவரும் லோத்திடம், “உன் குடும்பத்திலுள்ளவர்களில் யாராவது இந்த நகரத்தில் இருக்கிறார்களா? உனக்கு மரு மகன்களோ, மகன்களோ, மகள்களோ அல்லது வேறு யாராவது இந்நகரத்தில் இருந்தால் அவர்களை உடனே இந்நகரத்தைவிட்டு விலகச் சொல்ல வேண்டும். ௧௩நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றார்கள்.
௧௪ஆகவே, லோத்து வெளியே போய், தனது மகள்களை மணந்துகொள்வதாயிருந்த மருமகன்களிடம், “வேகமாக இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள். விரைவில் கர்த்தர் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார்” என்றான். அவர்களோ அவன் வேடிக்கையாகப் பேசுவதாய் எண்ணினார்கள்.
௧௫அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், “இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்” என்றனர்.
௧௬லோத்து குழப்பத்துடன் வேகமாகப் புறப்படாமல் இருந்தான், எனவே அந்த இரண்டு தேவதூதர்கள் அவன், அவனது மனைவி, மகள்கள் ஆகியோரின் கையைப் பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். லோத்தோடும் அவனது குடும்பத்தோடும் கர்த்தர் மிகவும் கருணை உடையவராக இருந்தார். ௧௭எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், “இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.
௧௮ஆனால் லோத்து அந்த இருவரிடமும், “ஐயா, அவ்வளவு தூரத்துக்கு ஓடும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். ௧௯உங்கள் சேவகனாகிய என் மீது நீங்கள் மிகவும் இரக்கம் வைத்திருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் மலைவரை என்னால் ஓட முடியாது. நான் மரித்துப்போய்விட வாய்ப்புண்டு. ௨௦அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றான்.
௨௧அதற்குத் தேவதூதன், “நல்லது, அவ்வாறு செய்ய உன்னை அனுமதிக்கிறேன். நான் அந்நகரத்தை அழிக்கமாட்டேன். ௨௨ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)
சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுதல்
௨௩சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான். ௨௪அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து, ௨௫அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார்.
௨௬அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.
௨௭அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான். ௨௮அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது.
௨௯தேவன் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களை அழித்துவிட்டார். அப்போது அவர் ஆபிரகாமை நினைத்து, ஆபிரகாமின் உறவினனான லோத்தை அழிக்காமல் விட்டார். பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்குள் லோத்து வாழ்ந்துகொண்டிருந்த அவ்விடங்களை அழிக்கும் முன்பு லோத்தை தேவன் வெளியேற்றினார்.
லோத்தும் அவனது மகள்களும்
௩௦சோவாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர். ௩௧ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை. ௩௨எனவே, நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்குச் சந்ததி உண்டாக நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றாள்.
௩௩அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவு கொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.
௩௪மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவு கொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவுகொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும்” என்றாள். ௩௫அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான்.
௩௬லோத்தின் இரு மகள்களும் கர்ப்பமுற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை. ௩௭மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். ௩௮இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்.