௧எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
௨உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.
௩கல் கனமானது. மணலும் சுமப்பதற்கு கனமானது. ஆனால் மிகுந்த கோபமுடைய முட்டாளால் ஏற்படும் துன்பம் இவ்விரண்டையும்விட சுமப்பதற்கு அதிகக் கனமானது.
௪கோபம் கொடுமையும் பயங்கரமுமானது. இது அழிவுக்குக் காரணமாகும். ஆனால் பொறாமை இதைவிட மோசமானது.
௫வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.
௬உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.
௭உனக்குப் பசி இல்லாதபோது, நீ தேனைக்கூட பருக முடியாது. ஆனால் நீ பசியோடு இருந்தால் சுவையற்றவற்றையும் கூட தின்றுவிடுவாய்.
௮ஒருவன் வீட்டைவிட்டு விலகியிருப்பது கூட்டைவிட்டுப் பிரிந்து இருக்கிற பறவையைப் போன்றதாகும்.
௯மணப்பொருட்களும் இனிய வாசனைப் பொருட்களும் உன்னை மகிழ்ச்சிப்படுத்தும். ஆனால் துன்பங்களோ உனது அமைதியான மனதை அழித்துவிடும்.
௧௦நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது.
௧௧என் மகனே, ஞானியாக இரு. அது என்னை மகிழ்ச்சிப்படுத்தும். அப்போது என்னை விமர்சிக்கிற எவனுக்கும் நான் பதில் சொல்ல இயலும்.
௧௨துன்பம் வருவதை உணர்ந்து ஞானிகள் விலகிவிடுவார்கள். அறிவற்றவர்களோ நேராகப் போய் துன்பத்தில் அகப்பட்டுக்கொண்டு அதனால் பாடுபடுகிறார்கள்.
௧௩அடுத்தவன் பட்ட கடனுக்கு நீ பொறுப்பேற்றால் உனது சட்டையையும் நீ இழந்துவிடுவாய்.
௧௪நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான்.
௧௫எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள். ௧௬அவனைத் தடுத்துநிறுத்த முயல்வது காற்றைத் தடுப்பது போன்றதாகும். அது கையில் எண்ணெயைப் பிடிக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
௧௭இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.
௧௮அத்திமரத்தை வளர்ப்பவன் அதன் பழத்தை உண்பான். இதுபோலவே, தன் எஜமானனைக் கவனிக்கிறவனும் அதனால் பல்வேறு பயன்களைப் பெறுவான். எஜமானனும் அவனைக் கவனித்துக் கொள்வான்.
௧௯ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப் போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.
௨௦ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.
௨௧தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இது போலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.
௨௨ஒரு முட்டாளை நீ நசுக்கி அழித்துவிட முடியும். ஆனால் உன்னால் அவனது முட்டாள்தனத்தை அவனிடமிருந்து பலவந்தமாக அகற்ற முடியாது.
௨௩உனது ஆடுகளையும் மந்தையையும் கவனமாகப் பார்த்துக்கொள். உன்னால் இயன்றவரை அவற்றைக் கவனமாக காத்துக்கொள். ௨௪செல்வம் எப்பொழுதும் நிலைப்பதில்லை. தேசங்களும் எப்பொழுதும் நிலைக்காது. ௨௫புல்லை வெட்டினால் புதிய புற்கள் முளைக்கும். எனவே மலை மீது வளரும் புல்லை வெட்டு. ௨௬உனது ஆட்டுக்குட்டி மீதுள்ள மயிரை வெட்டி கம்பளிச் செய். உனது ஆடுகளை விற்று நிலத்தை வாங்கு. ௨௭உனக்கும் உனது குடும்பத்திற்கும் தேவையான பால் ஏராளமாக இருக்கும். உனது வேலைக்காரிகளின் உடல் நலத்திற்கும் அது உதவும்.