எருசலேம் பெண்கள் அவளிடம் பேசுகிறார்கள்
௧அழகான பெண்ணே
உன் நேசர் எங்கே போனார்?
உன் நேசர் எந்த வழியாகப் போனார்?
எங்களிடம் சொல். அவரைத் தேட உனக்கு உதவி செய்வோம்.
அவள் எருசலேம் பெண்களுக்கு பதிலளிக்கிறாள்
௨என் நேசர் கந்தவர்க்கப் பூக்களுக்காக தோட்டத்தில் மேய
லீலி மலர்களைக் கொய்ய தன் தோட்டத்திற்குப் போனார்.
௩நான் அவருக்குரியவள். அவர் எனக்குரியவர்.
அவர் லீலிகளை மேய்பவர்.
அவன் அவளிடம் பேசுகிறான்
௪என் அன்பே நீ திர்சாவைப்போன்று அழகானவள்.
எருசலேமைப்போன்று இனிமையானவள்.
நீ கம்பீரமான நகரங்களைப் போன்றவள்.
௫என்னைப் பாராதே உன் கண்கள் என்னை வென்றுவிட்டன.
உன் கூந்தல் கீலேயாத் மலைச் சரிவில் நடனமாடும்
வெள்ளாட்டு மந்தையைப் போல் அசைந்துகொண்டிருக்கிறது.
௬உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போலுள்ளன.
அவை இரட்டைக் குட்டிகள் போட்டு,
எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப் போலுள்ளது.
௭உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட
மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.
௮அறுபது ராணிகள் இருக்கலாம்
எண்பது மறுமனையாட்டிகள் இருக்கலாம்.
எண்ண முடியாத அளவிற்கு இளம் பெண்கள் இருக்கலாம்.
௯ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள்.
எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள்.
அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள்.
அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள்.
இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள்.
ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.
பெண்கள் அவளைப் பாராட்டுகிறார்கள்
௧௦யார் இந்த இளம் பெண்?
விடியலின் வானம் போல் பிரகாசிக்கிறாள்.
நிலவைப் போல் அழகாக இருக்கிறாள்.
சூரியனைப்போல் ஒளி வீசுகிறாள்.
வானத்தில் உள்ள படைகளைப்போல்
கம்பீரமாக விளங்குகிறாள்.
அவன் அவளிடம் பேசுகிறான்
௧௧பள்ளத்தாக்குகளில் பழுத்த கனிகளையும்,
திராட்சைத் தோட்டத்தில் தோன்றிய துளிர்களையும்
மதளஞ்செடிகளால் மலர்ந்த பூக்களையும் காண,
நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
௧௨நான் உணர்ந்துகொள்வதற்கு முன்பே,
என் ஆத்துமா என்னை அரசர்களின் இரதங்களுக்குள் அமரச்செய்கிறது.
எருசலேம் பெண்கள் அவளை அழைக்கிறார்கள்
௧௩திரும்பிவா சூலமித்தியே திரும்பிவா,
திரும்பி வா, திரும்பிவா அப்பொழுதுதான் உன்னைப் பார்க்கமுடியும்
சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்?
அவள் மகானனம் நடனம் ஆடுகிறாள்.