சங்கீதம் 127
சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல். 
 1 யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால், 
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; 
யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால், 
காவலர் அதைக் காவல் செய்வதும் வீண். 
 2 நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து, 
நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்; 
ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு 
அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார். 
 3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து; 
பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே. 
 4 ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் 
போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள். 
 5 இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய 
மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; 
நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது, 
அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.