எலிப்பாஸ் யோபுக்குப் பதில் கூறுகிறான்
௧அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,
௨“யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய்.
வெப்பக் காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான்.
௩பொருளற்ற பேச்சுக்களாலும்
தகுதியற்ற வார்த்தைகளாலும் ஒரு ஞானவான் விவாதிப்பானென்று நீ நினைக்கிறாயா?
௪யோபுவே, நீ கூறும்படி நடந்தால்,
ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான்.
௫நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.
யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய்.
௬நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை.
உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன.
உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன.
௭“யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா?
மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா?
௮நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா?
நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா?
௯யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம்.
உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
௧௦நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள்.
ஆம், உனது தந்தையைக் காட்டிலும் வயது முதிர்ந்தோரும் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்.
௧௧தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை.
தேவனுடைய செய்தியை நயமாக நாங்கள் உனக்குக் கூறினோம்.
௧௨யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை?
ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை?
௧௩நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது
நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.
௧௪“ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
பெண் வயிற்றில் பிறந்த ஒருவன் நியாயமுள்ளவனாக இருக்க முடியாது.
௧௫தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை.
வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல.
௧௬மனிதன் இன்னும் கேவலமானவன்,
மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான்.
தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.
௧௭“யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன்.
எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.
௧௮ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன்.
ஞானவான்களின் முற்பிதாக்கள் அவர்களுக்கு இவற்றைக் கூறினார்கள்.
அவர்கள் எந்த இரகசியங்களையும் என்னிடமிருந்து மறைக்கவில்லை.
௧௯அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள்.
கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை.
எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.
௨௦தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான்.
கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான்.
௨௧ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது,
அவன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது அவனது பகைவன் அவனைத் தாக்குவான்.
௨௨தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான்,
மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை.
அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது.
௨௩அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான்,
ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும்.
அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான்.
௨௪கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும்.
அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும்.
௨௫ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான்.
அவன் தனது கை முட்டியைத் தேவனுக்கு எதிராக உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிராகச் செயல்படுகின்றான். தோற்கடிக்க முயல்கிறான்.
௨௬தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன்.
அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான்.
௨௭அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,
௨௮ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும்,
அவன் வீடு வெறுமையாகும்,
௨௯தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான்.
அவன் செல்வம் நிலைக்காது.
அவனது பயிர்கள் செழிப்பாக வளராது.
௩௦தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான்.
நோயினால் மடியும் இலைகளையும்
காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான்.
௩௧தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது.
ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.
௩௨அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான்.
என்றும் பசுமையுற முடியாத, உலர்ந்த கிளையைப் போல அவன் இருப்பான்.
௩௩இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான்.
மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான்.
௩௪ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை).
பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும்.
௩௫தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்” என்று கூறினான்.